இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Saturday 19 April, 2008

நன்றி! நன்றி!! நன்றி!!! - குசும்பன்

இன்னும் சில தினங்களுக்கு இணையம் பக்கம் வரமுடியாத காரணத்தால் ... குசும்பன் என்னிடம் கெஞ்சி, தரையில் விழுந்து அழுது புரண்டு கேட்டுக் கொண்டதால்..அவர் சார்பில் அவர் சொல்லியதை இங்கு பதிவாக போடுகிறேன்.


ஓவர் டூ குசும்பன்...
" என் திருமணத்திற்கு இவ்வளவு நண்பர்கள் நேரில் வந்து சிறப்பித்ததை என்னால் மறக்கவே முடியாது. அன்று நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய நண்பர்களுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியவர்களுக்கும் என்னை தொடர்பு கொள்ள முடியாமல் திருமணத்திற்கு வந்த நண்பர்களின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய/வாழ்த்த சொன்ன நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக வாழ்த்திய நண்பர்களுக்கும் பதிவுகள் மூலமாகவும் பின்னூட்டங்கள் மூலமாகவும் வாழ்த்திய நண்பர்களுக்கும் குறிப்பாக 1000த்திற்கு மேல் மின்னஞ்சல்கள் பரிமாறி கும்மி அடித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் கனிவான நன்றிகள்."

அன்புடன்,
திரு மற்றும் திருமதி.குசும்பன் @ சரவணவேல்

Friday 18 April, 2008

அபிஅம்மா.. அபிக்கு மட்டும் இல்ல.. எங்களுக்கும்..

அந்த வீட்டிலேயே ரொம்ப நல்லவங்க.. எதையும் தாங்கும் இதயம்.. பின்ன.. இந்த அபியப்பாவை சமாளிக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்?.. அதை விட பெரிய விஷயம் அந்த அராத்து அபிராமியையும் குட்டி தாதா நட்டுவையும் சமாளிக்கிறது.. அப்பப்பா.. என்னா ஒரு வில்லத் தனமானவங்க இவங்க 3 பேரும்.... ஆனா நான் எதையும் தாங்கும் இதயம்னு சொன்னதுக்கு காரணம் வேற.. அதாவது 2 நாள் எங்களுக்கு சமைச்சி போட்டு சமாளிச்சாங்க பாருங்க.. நிஜமாவே அபி அம்மா தி க்ரேட் தான்.

15ம் தேதி காலைல அபி வீட்டுக்கு போனோம்..மேல் மாடி ரூம்ல போய் பேக் எல்லாம் அப்டியே கடாசிட்டு கட்டில் மேல உக்காந்து கொஞ்ச நேரம் கதை அடிச்சிட்டு இருந்தோம். பசிக்க ஆரம்பிச்சது... எல்லாரும் மாத்தி மாத்தி ஒருத்தர் மூஞ்சிய இன்னொருத்தர் பாத்துட்டு இருந்தோம்... பூனைக்கு யாரு மணி கட்டறதுங்கற ரேஞ்ச்ல...சாப்ட போறதுக்கு இல்ல.. அதுக்கு முன்னாடி பல் துளக்கிட்டு அப்புறம் குளிக்கனுமாம்ல.. அப்போ தான் சோறு போடுவாங்களாம்.. என்ன கொடுமை சார் இது...எங்களோட பல வருஷ விரதத்தை கலைக்க வச்சிட்டாங்க.. சரி மொதல்ல யார் குளிக்கிறது?.. நீ நான்னு எங்களுக்குள்ள செம போட்டி.. யார் கடைசியா குளிக்கிறதுங்கறதுல....:)

அப்புறம் ஒரு வழியா கொஞ்சம் பெருந்தன்மையோடயும் செம கடுப்போடயும் நம்ம இம்சை அண்ணன் முதல் ஆளாக குளிக்க போனார்... அப்புறம் கொஞ்சம் விட்டுக் குடுத்து இளையகவி கணேஷ் குளிச்சார்.. மங்களூர் சிவா மாம்ஸ் குளிக்கட்டும் .. அப்புறம் நாம குளிக்கலாம் என்று நான் காத்துட்டு இருந்தேன்.. ஆனா அந்தாளுக்கு சரியான நெஞ்சழுத்தம். அபிஅப்பா லேப்டாப்பில சார்ஜ் தீரும் வரை ஆன்லைனில் இருந்தார். நானும் எவ்வளவு நேரம் தான் பசியை கட்டுபடுத்திட்டு இருக்கிறது.... போய்யா டேஷ்னு நான் குளிக்க போய்ட்டேன்.. அப்புறமா அவர கழுத்த புடிச்சி பாத் ரூம்ல தள்ளி விட்டோம்.. குளிச்சாரா இல்ல.. தலையை மட்டும் நனைச்சிட்டு வந்தாரா தெரியலை.

அப்புறம் கீழ போய் ஹால்ல ரவுண்டு கட்டி உக்காந்தோம்...ஒரு பெரிய ஹாட் பாக்ஸ்ல பூரி.. அதைவிட பெரிய ஹாட் பாக்ஸ்ல இட்லி.. அதைவிட ரொம்ப பெரிய பாத்திரத்துல பொங்கல்... அதை பார்த்ததும் நாங்க எல்லாரும் கோரஸா சொன்ன டயலாக் " அச்சச்சோ.. எதுக்கு இவ்ளோ சமைச்சிங்க.. யார் இதெல்லாம் சாப்பிடறது? எங்க 4 பேருக்கு இவ்ளோ எதுக்கு.. எல்லாம் வீணாகப் போகுது"... சரி.. பசங்க எல்லாம் கம்மியா தான் சாப்பிடுவாங்க போலனு நெனச்சிட்டாங்க போல..

இன்னும் சிலர் வரேன்னு சொல்லிட்டு கடைசி நேரத்துல வராம போய்ட்டாங்க. அது அபி அம்மாவுக்கு தெரியாது. அதனால அவங்க குத்து மதிப்பா ஒரு 15 பேருக்கு சமைச்சி வச்சது தான் மேல நான் சொன்னது எல்லாம்... உங்களுக்கு எதுக்கு சிரமம் .. நாங்களே போட்டுக்கிறோம்.. எல்லாத்தயும் இங்க எடுத்து வச்சிடுங்கன்னு சொன்னப்போவே அபிஅம்மா உஷாரா ஆயிருக்கனும். ஆனா பாவம்.. அவங்க எங்கள எல்லாம் ரொம்ப நல்லவங்கனு நெனச்சாங்களோ என்னவோ.. சமைச்சதை எல்லாம் அப்டியே கொண்டு வந்து வச்சிட்டாங்க.

எல்லாரும் முதல் ரவுண்டு இட்லில ஆரம்பிச்சோம். முதல் ரவுண்டு முடியும் போது பாதி இட்லி காலி.. அடுத்து பூரி... பூரிக்கான முதல் ரவுண்டுலையே மொத்தமும் காலி...அடுத்து பொங்கல் முதல் ரவுண்டு... நாங்க பொங்கல் சாப்டுட்டு இருக்கும் போதெ அபிஅம்மா கிச்சன்க்கு போய்ட்டாங்க...சரி எதோ வேலை இருக்கும் போலன்னு நெனைச்சிட்டு நாங்க எங்க கட்மைல கண்ணா இருந்தோம். அடுத்து இட்லி ரெண்டாவது ரவுண்டு ஆரம்பிச்சோம். ரெண்டாவது ரவுண்ட்ல இட்லி காலி. அடுத்து பூரியும் காலி. அடுத்த கொஞ்ச நேரத்துல பொங்கலும் காலி...பொங்கல் காலி ஆகற நேரத்துல அபிஅம்மா ஒரு பெரிய பாத்திரம் கொண்டு வந்து வச்சாங்க. என்னடானு பார்த்தா அந்த பாத்திரம் ஃபுல்லா பூரி.. நாங்க சாப்ட்ட வேகத்தை பார்த்து பயந்து போய் திரும்பவும் பூரி செய்யத் தான் சமையல் கட்டுக்கு போய் இருக்காங்க.. ஆஹா.. என்ன ஒரு தீர்க்கத் தரிசி... நிஜமா சொல்றேன்.. மிகை படுத்தல.. அந்த பாத்திரமும் கொஞ்ச நேரத்துல காலி... அபி அம்மாவும் சளைக்காம பூரி செஞ்சி சுடச் சுட குடுத்துட்டே இருக்காங்க.. நாங்களும் சாப்டுட்டே இருக்கோம்.... ஒரு கட்டத்துல எங்க வேகம் கொறைஞ்சது. சரி.. இபோதைக்கு இது போதும்னு எழ நினைக்கும் போது.. இந்த அபி அப்பா வாயை வச்சிட்டு சும்மா இருக்க மாட்டாரா? யார்னா முட்டை தோசை சாப்பிடறிங்களானு ஒரு வார்த்தையை கேட்டுட்டார்... இம்சை வேண்டாம்னு சொல்லிட்டார்.. நானும் காலை நேரத்தில் முட்டை கலந்த உணவு சாப்பிட மாட்டேன்.. நானும் வேண்டாம் என்று சொல்லிட்டேன்... மங்களூர் சிவா, வீட்டில் மட்டும் அசைவம் சாப்பிடும் பழக்கம் இல்லை.. அதனால் அவரும் வேண்டாம் என்று சொல்லிட்டார்... அடுத்து நம்ம இளைய கவி கணேஷ்.. அவரால் வேண்டும் என்றும் சொல்ல முடிய வில்லை.. வேண்டாம் என்றும் சொல்ல முடியவில்லை... ஒரு மாதிரியாக நெளிந்தார்... அபிஅப்பாவும் மற்ற இடத்தில் இப்படி தான் நெளிவாரோ என்னவோ.... சரியாக கண்டு பிடித்துவிட்டார்... ஒரு முட்டை தோசை மட்டுமாவது சாப்பிடுங்க என்று இளைய கவியிடம் சொன்னது தான் தாமதம்... நாங்கள் அனைவரும் வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் அவரால் நேரடியாக கேட்க முடியவில்லை.. எனவே அபிஅப்பாவை பார்த்து நீங்க சாப்பிடறதா இருந்தா நான் சாப்பிடறேன் என்று ஒரு பிட்டை போட்டார்... அவர் அப்படி சொல்லி முடிக்கவும் அபிஅம்மா ஒரு முட்டை தோசையை இளைய கவி தட்டில் வைக்காவும் சரியாக இருந்தது... அதாவது மக்களே..இவர் நெளிவதை பார்த்த உடனே அபிஅம்மா தோசை ஊத்த ஆரம்பிச்சிடாங்க போல... மறுபடியும் என்னா ஒரு தீர்க்கத் தரிசி.... அப்டியே மீன் வறுவல், வடை என்று ப்ளேட் ப்ளேட்டாக காலி ஆய்ட்டு இருந்தது..இப்படியாக ஒரு வழியாக காலை "சிற்றுண்டி" முடிந்தது.

............ என் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்ட அபியை பார்க்க பாவமாக இருந்தது... அதனால ஒரு பூரியை எடுத்து அவள் தட்டில் வைத்தேன்... அங்கிள் என்னால சாப்பிட முடியாது அங்கிள்னு சொன்னா.. அட என்னம்மா நீ.. வளர்ற பொண்ணு.. இது நம்ம வீடு மாதிரி கூச்சப் படாம சாப்டுனு சொன்னேன்... என்னாடா இவனுங்க இந்த தீனி திங்கறானுங்களேன்னு செம கடுப்புல இருந்தாளோ என்னவோ.." ஹலோ.. இது என் டயலாக்.. இதெல்லாம் நீங்க சொல்லப் படாது.."னு சொல்லிட்டா...( ஓசில சாப்ட்டமா .. போனமானு இல்லாம என்னடா வெட்டி பேச்சினு நெனைச்சாலோ என்னவோ.. :P )

இந்த கலாட்டா எல்லாம் முடிஞ்சதும் உண்ட மயக்கத்துல கொஞ்ச நேரம் உருண்டு பொரண்டுட்டு இருந்தோம்... அப்புறம் கொஞ்ச நேரத்துல காஃபி குடுத்தாங்க... என்னடா இவனுங்க என்னத்த குடுத்தாலும் வேணாம்னு சொல்லாம இந்த வாங்கு வாங்குறானுங்களேனு நெனைச்சாரோ என்னவோ .. அபிஅப்பா எங்கள எல்லாம் இல்லாத காவிரி கரையை காட்டறதா சொல்லி வெளிய கூட்ட்டிட்டு போனார்... அதுவும் 12 மணிக்கு... வெயில் சுட்டெரிக்கிது.. மனசாட்சியே இல்லாம இழுத்துட்டு போனார்.. பின்ன... மனசாட்சியே இல்லாம அந்த காட்டு காட்டினோம்ல.. அந்த கடுப்பு அவருக்கு.... பாதி வழியில போனதும் அதோ பாருங்க அதான் காவிரி கரைனு காட்டினார்.. ஆனா அப்டி எதுவுமே எங்களுக்கு தெரியலை.. ஆனா அடிக்கிற வெயிலுக்கு பயந்து அதை பத்தி எதுவுமே சொல்லாமா.. ஓ .. அது தானா.. அப்டினு மட்டும் சிம்பிளா முடிச்சிகிட்டு திரும்பிட்டோம்.. எங்க கஷ்டம் எங்களுக்கு... மத்தியான சாப்பாடு வேற வீட்ல அபிஅம்மா ரெடி பண்ணிட்டு இருந்தாங்க....

வழியில ஒரு கடைல எலந்த வடை, கடலை மிட்டாய், இஞ்சி சோடா, மோர் எல்லாம் வாங்கி குடுத்தார்னு கெளரவமா சொல்ல ஆசை பட்டாலும்... நாங்களா தான் கடைல தொங்க விட்டிருந்ததை புடுங்கி தின்னுட்டு அபிஅப்பா காசு தருவார்னு அவர் பக்கம் கையை காட்டிட்டு வந்த உண்மையை சொல்லாமல் இருக்க முடியலை..அப்டியே ஒரு கோழிக்கறி கடைல கறி வாங்கிட்டு வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் நல்லா ரெஸ்ட் எடுத்தோம்.. பின்ன.. அடுத்த ஆட்டத்தை ஆடனும்ல... அப்புறம் அபிஅம்மா பொக்குனு போய்டுவாங்கல்ல...எங்களை நம்பி தான ஒரு கல்யாண வீட்ல சமைக்கிற மாதிரி சமைச்சிட்டு இருந்தாங்க....

மதிய உணவும் சாதரனமா இல்லை.. சிங்கங்கள் எல்லம் செம ஃபார்ம்ல இருந்தோம்.. நானும் சிவாவும் சைவம்.. இம்சை அண்ட் இளையகவி அசைவம்... கோழிகறி கொழம்பு.. சாம்பார் , ரசம் , மோர், அப்பளம் என செம கட்டு கட்டினோம்....ம்ம்ம்.. அபிஅம்மா இதுகெல்லாம் கொஞ்சம் கூட அசரவே இல்லையே.. வடிச்சி கொட்டிட்டே இருந்தாங்க.. நாங்களும் சளைக்காம உள்ள தள்ளிட்டே இருந்தோம்.... நல்ல வேளை.. கவிதாயினி முதல் நாள் எங்களோட கூட்டணி சேரலை.. இல்லைனா அபிஅம்மா நெலமை ரொம்ப பரிதாபமா ஆயிருக்கும்...:)

அடுத்து ... மாலை 6 மணி போல குசும்பன் கல்யாணத்துக்கு கெலம்பர வைபோகம்... நாங்க எல்லாம் தெளிவா எல்லாத்தயும் எடுத்து கார்ல வச்சிட்டோம். அபிஅம்மா தான் ரொம்ப பாவம்.. எங்களுக்கு சமைச்சி போட்டே ரொம்ப டயர்ட் ஆய்ட்டாங்க போல... வந்து கார்ல உக்காந்ததும்.. அச்சச்சோ அதை மறந்துட்டனே என்று எதாவது எடுக்க திரும்ப வீட்டுக்கு போவாங்க.. அதுக்கப்புறம் கார்ல உக்காந்ததும் திரும்ப எதுனா மறந்து வச்சதை எடுத்துட்டு வர போவாங்க... இப்டியே கொஞ்ச நேரம் போய்ட்டிருந்தது... கடைசியா நட்டு துணி இருந்த பை மறந்துட்டாங்க... அபிஅப்பா தானே எடுத்துட்டு வரேன்னு போனார்.. அபிஅம்மா தெளிவா சொன்னாங்க .. பச்ச கலர் பைன்னு.. நம்ம தலைவர் எதோ ஒரு மஞ்ச கலர் பையை எடுத்துட்டு வீட்டயும் பூட்டிட்டு இருந்தார்.. இவர நம்பினா வேலைக்கு ஆகாதுனு அபிஅம்மாவே போய் அந்த பை எடுத்துட்டு வந்தாங்க.. ஓருவழியா கார் கெளம்பிடிச்சி.. பாதி தூரம் போனதும் தான் தெரிஞ்சது.. அபி அடுத்த நாள் போட வேண்டிய துணிகளும் அபி அப்பா சலவை செய்து வைத்த அவரோட துணிகளும் மறந்துட்டு வந்தது... :)).. அப்புறம் என்ன பண்றது.. அவ்ளோ தூரம் போய்ட்டு திரும்பியா வர முடியும்... அடுத்த நாள் அபிஅப்பா வேஷ்டி சட்டையில் வந்து எபப்டியோ சமாளிச்சார்...

திரும்ப அடுத்த நாள் குசும்பன் கல்யாணம் முடிஞ்சி.. மதியம் அபி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்... கொஞ்சம் ஓய்வு.. ரயிலுக்கு நேரம் ஆகிவிட்டதால் அபி அம்மாவின் நல்ல நேரமோ என்னவோ எங்களால் அங்கு அதிக நேரம் இருக்க முடியவில்லை... மதியம் குசும்பன் கல்யாணத்திலேயே சாப்பிட்டு விட்டு தான் வந்தோம்... ஆனாலும் வந்த வேகத்தில் அபிஅம்மா இட்லியும் கொஸ்துவும் செஞ்சிட்டாங்க.... ரயிலில் இரவு சாப்பிடுவதற்கு தேவையான அளவு 4 பொட்டலங்களாக கட்டி வச்சாங்க... அது பத்தாதுன்னு அப்போவே சாப்ட சொல்லி எல்லார்க்கும் தட்ல வச்சி குடுத்தாங்க.. எல்லாரும் சொல்லி வச்ச மாதிரியே... " அய்யய்யோ வேணாம்க்கா.. இப்போ தான சாப்ட்டு வந்தோம்.. அதுக்குள்ள எப்டி சாப்டறது.. அதுவும் இல்லாம இப்போ சாப்ட்டா ரயிலில் சாப்ட முடியாது எல்லாம் வீண் ஆய்டும்"னு அளந்து விட்டுட்டு இருந்தோம்... அதான் 2 நாளா எங்க யோக்கியதையை தான் பாத்தாங்களே.. அதனால தட்ல போட்டு வச்சிட்ட்டாங்க.. அடுத்த 2 நிமிஷத்துல எல்லாம் காலி... கடைசில காயத்ரிக்கு வச்சிருந்த இட்லியையும் சிவாவும் இளையகவியும் அபேஸ் பண்ணிட்டு கவிதாயினிக்கு வெறும் கொஸ்து மட்டும் மிச்சம் வச்சிருந்தாங்க... அதை பார்த்து கவிதாயினி பாவமாக முழித்ததை காண கண் கோடி வேண்டும்.... பொட்டலம் கட்டிய இட்லியும் கொஸ்துவும் என் பைல மறக்காம் எடுத்து வச்சிகிட்டோம்...:)))

இதெல்லாம் முடிந்து ரயில் நிலையம் சென்று கவிதாயினி, இளையகவி , இம்சை 3 பேருக்கும் டிக்கெட் வாங்கி முடிச்சதும் அபி கிட்ட இருந்து போன்.. இம்சை லேப்டாப் சார்ஜர் விட்டுட்டு வந்துட்டார்.. பின்ன கவனமெல்லாம் சாப்பாட்டுலையே இருந்தா இப்டி தான் ஆகும்.. :P... அதை கூரியரில் அனுப்ப சொல்லிட்டோம்..

ரயிலில் போகும் போது திருச்சியை தாண்டியும் யாரும் சாப்பிடவே இல்லை.. எனக்கே பயங்கற ஆச்சர்யம்.. நானும் பல முறை எல்லார்கிட்டயும் சொல்லி பார்த்தேன்.. சாப்பிடுங்க.. சாப்பிடுங்க என்று.. எல்லாரும் செம பந்தா பண்ணாங்க.. வேணாம் .. பசிக்கலை.. சாப்பிட முடியாது.. என்று .. வழக்கம் போல இளையகவி கொஞ்சம் ஜாஸ்தியாவே சீன் போட்டார்.. வேண்டாம் என்று... நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன்.. இவங்களுக்கெல்லாம் அபிஅம்மா வைத்தியம் தான் சரி என்று நினைத்து இட்லியை எடுத்து எல்லார் கைலையும் குடுத்துட்டேன்.. இருந்தது 4 பொட்டலம்.. நாங்களோ 5 பேர்...என்னை தவிர மற்ற 4 பேருக்கும் குடுத்துட்டேன்..எனக்கௌ மட்டும் இல்லாம போய்டிச்சி.. என்னை பார்த்து ஒருத்தருமே பரிதாபப் படலை.. பாவிகள்.. எல்லாரும் வெளுத்துக் கட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. நானும் எவ்ளோ நேரம் தான் அவங்க வாயையே பாத்துட்டு இருக்கிறது... என் பக்கத்தில் அப்பாவியாய் கவிதாயினி தான் உக்காந்துட்டு இருந்தாங்க.. என்ன பார்த்தா பாவமா தெரிஞ்சதோ என்னவோ.. போனா போகுதுனு அவங்க இலையிலையே ஒரு ஓரத்துல கொஞ்சம் இடம் குடுத்து அவங்களுக்கு குடுத்த இட்லியை என்னையும் சாப்பிட சொன்னாங்க.... நீ நல்லா இருக்கனும் தாயினு சாப்பிட்டேன்... அவங்க 3 பேருக்கும் பத்தலைனு அவங்க நெளிஞ்சத பார்த்தாலே புரிஞ்சது... நாங்க சாப்டு மிச்சம் வச்ச ஒரெ ஒரு இட்லியையும் மங்களூர் சிவா விட்டு வைக்கல.... அடபாவிகளா .. இதுக்காய்யா இம்புட்டு நேரமா வேண்டவே வேண்டாம் இந்த வயிற்றில் இடமில்லைனு த்ரீ ரோஸஸ் விளம்பரம் மாதிரி பாடிட்டு இருந்தீங்க..:(....

................

அன்று மாலை நாங்கள் வந்தவுடன்.. அபிஅப்பாவிற்கு செம அடி விழுந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.. யோவ் உனக்கு ஆக்கி போடறதே பெரிசு.. இதுல உன் கூட்டளிங்கள வேற கூட்டியாந்த்து ஊட்ல விட்டுட்டியா.. மனுஷங்களாய்யா அவங்க.... நானும் எவ்வளவு தான் ஆக்கிப் போட்டுட்டே இருக்கிறது.... அவனுங்களும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அப்டி திங்கறானுங்கய்யா... உனக்கே அளவோட தான் சோறு போடறேன்.. ஆனா அவனுங்க 6 மாச மளிகை சரக்குகளை ரெண்டே நாள்ல காலி பண்ணிட்டானுங்க.... இனி கூட்டிட்டு வருவியா.. கூட்டிட்டு வருவியானு செமத்தியா அடி பின்னி எடுத்திருப்பாங்க...:)))
------------------
ஹிஹி... இது சும்மா டமாசுக்கு..

நிஜமாவே கொஞ்சம் கூட சுமையா நினைக்காம சிரிச்ச முகத்தோடையே கூட பிறந்த தம்பிகளை கவனிக்கிற மாதிரி அபிஅம்மா அவ்ளோ அன்பா கவனிச்சாங்க... நன்றினு சொல்லி அவங்களை பிரிச்சி பாக்க கூட மனசு வரலை....அவங்க எவ்ளோ பாசமா எங்களை கவ்வனிச்சி இருந்தா நாங்க எங்க வீடுங்கிற உணர்வுல அந்த காட்டு காட்டி இருப்போம்னு நெனைச்சி பாருங்க.... உண்மையில் அபிஅப்பா ரொம்ப குடுத்து வச்சவர்...

கொசுறு : அபிஅம்மா ஒரு சிவில் இஞ்சினியர்... இப்போது அவர்கள் இருக்கும் வீட்டை அழகாக திட்டமிட்டு கட்டியது அபிஅம்மா தான்.

.. நேரம் ஒத்துழைத்தால் கோவை டூ மயிலை டூ திருவாரூர் டூ மயிலை டூ கோவை பயணம் பத்தி பதிவு போடறேன்.. உண்மையில் அவ்வளவு அழகான பயணம் இது... புது மாப்பிள்ளை குசும்பனுக்கு நன்றிகள் பல...

Saturday 12 April, 2008

பெங்களூரில் அலுவலக வாடகை குறையும்.


பெங்களூரில் அலுவலகங்களுக்கான வாடகை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா(STP) திட்டத்தின் படி மென்பொருள் நிருவனங்கள் தற்போது அனுபவித்து வரும் சலுகைகள் மார்ச் 2009ல் காலாவதி ஆகிறது. ஆகவே தாங்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை மிச்சம் பிடித்து தற்போதுள்ள லாபத்தை தக்க வைத்துக் கொள்ளாவும் மேலும் புதிய சலுகைகளை அனுபவிக்கவும் இந்த நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இடம் பெயர உள்ளன.

கர்நாடகத்தில் மொதம் 13 சி.பொ.ம. விற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அதில் 11 பெங்களூர் நகரில் அமைய உள்ளது. ஆகவே பெங்களூர் நகரத்தில் தற்போது உள்ள நிறுவனங்களுக்கு போதுமான இடம் சிபொம வில் கிடைத்து விடும். இப்போது அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இடங்கள் காத்து வாங்க ஆரம்பித்துவிடும். வேறு வழியே இல்லாமல் அந்த இடத்திற்கு சொந்தகாரர்கள் வாடகையை குறைத்தே ஆக வேண்டும்.

இதனால் வீட்டு வாடகை எதுவும் குறைய வாய்பில்லை. ஒருவேளை நிறுவங்களுக்கு தருவது போல் அதன் பணியாளர்களுக்கும் சில சலுகைகளுடன் சிறப்பு குடியிருப்பு மண்டலங்கள் அமைத்தால் ஒருவேளை வீட்டு வாடகைகளும் குறையலாம் :)...

இருங்க நம்ம விஜயகாந்த் உங்க கிட்ட என்னவோ பேசனுமாம்..
தலைவா .. பேசுங்க தலைவா..

ஏய்.. பெங்களூருல ஐடி கம்பனிங்கள்ல மட்டும் மொத்தம் 4 லட்சம் பேர் வேலை பாக்கிறாங்க. அந்த கம்பனிங்க எல்லாம் சேர்ந்து மொத்தம் 100மில்லியன்ன் சதுர அடி இடத்தை ஆக்கிரமிச்சி இருக்காங்க. இதுல முக்கால்வாசி இடம் லீசுக்கு எதுத்திருக்காங்க... சில வருஷங்களுக்கு முன்னாடி அதாவது மார்ச் 2004ல் அலுவலக வாடகை ஒரு சதுர அடிக்கு ரூ.22 முதல் 42 வரை இருந்திச்சி.. ஆனா இப்போ ஒரு சதுர அடி இடத்துக்கு 48 முதல் 78 வரை இருக்கு... இனி இதெல்லாம் கொஞ்சம் குறையும்.. வர்ட்டா.. ஹும்....

கொசுறு : டிசம்பர் 2007 தகவல்படி...இந்தியாவில் 282.87 மில்லியன் தொலைபேசி இணைப்புகள் வழங்கபட்டிருக்காம். அதாவது 28 கோடிக்கு மேல.. ஹய்யோ... கலக்கறாங்கய்யா... 2010க்குள்ள 500மில்லியன் இணைப்புக்கு இலக்கு வச்சிருக்காம் இந்திய அரசாங்கம். அட சீனாவ மிஞ்சிடுவோம் போல இருக்கே... அல்லாரும் ஜோரா ஒருவாட்டி கை தட்டுங்கபா.. :))

டிசம்பர் 2007 வரை 3.13மில்லியன் ப்ராட்பேண்ட் இணைப்புகள் வழங்கப் பட்டிருக்கு. இன்னும் 3 வருடத்தில் 20மில்லியன் ப்ராட்பேண்ட் இணைப்புகள் வழங்க இலக்கு வச்சிருகாங்களாம். ஆகவே மக்களே எல்லாரும் உங்க டயல் அப் கனெக்ஷன தூக்கிட்டு ப்ராட்பேண்ட் வாங்க தயாரா இருங்க சாமியோவ்... ஏன்னா தகவல் தொழில்நுட்பத் துறையில் பல புதிய மாறுதல்களை பண்ணும் திட்டத்தை தன் குர்தா பையில் வச்சிக்கிட்டு சுத்திட்டு இருக்காராம் எங்க சின்ன சிந்தியா... அப்டியே அண்ணாச்சிக்கு ஒரு வாழ்த்து சொல்லிடுவோம்.:)
நான்றி : SI dailydose.

Friday 4 April, 2008

ஏப்ரல் மாத PIT போட்டிக்கு

கடந்த வாரம் ஊருக்கு போயிருந்த போது எடுத்தது. இந்த மாத PIT தலைப்புக்கு பொருந்துவது போல் தோன்றியது...








அபப்டியே இங்கயும் பாக்கலாம்.. http://www.flickr.com/photos/sanjaimgandhi/

Tamiler This Week