இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday 29 February, 2008

ஸ்ஸ்ஸ்.. கண்ணை கட்டுதே .. என்று பின்னூட்டமிடும் பதிவர்களை எச்சரிக்கிறேன்.


சமீக காலமாக மட்டுமில்லாமல் நீண்ட காலமாகவே நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். சில பதிவர்கள் இருக்கிறார்கள். யார் பதிவுக்கு போனாலும், அங்கு போய்.. "ஸ்ஸ்ஸ் ..அப்பாடா கண்ணை கட்டுதே" என்று கொஞ்சமும் பொறுபில்லாமல் பின்னூட்டம் இடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன உங்களுக்கெல்லாம் அப்படி ஒரு அலட்சியம்.? ஒரு முறை இரு முறை என்றாலும் பரவாயில்லை. சிலர் பல முறை கண்ணக் கட்டுகிறது என்று பின்னூட்டம் போடுகிறார்கள். இதை இது வரை கண்டிக்காத அல்லது இவர்களுக்கு சரியான அலோசனை வழங்காத டெல்பின் அம்மா போன்ற பதிவுலக மருத்துவர்களையும் கண்டிக்கிறேன்.

கண்ணை கட்டுவதை பின்னூட்டமாக தெரிய படுத்துவதில் என்ன பயன் ?.. உடனடியாக ஒரு நல்ல டாக்டரை பாருங்கள். உங்களுக்கு "சின்கோப்" நோய் இருக்கலாம். இதன் அறிகுறி தான் இப்படி அடிக்கடி கண்ணை கட்டுவது, தலை சுற்றுவது( அஜீத் ஊர் சுற்றுவது இல்லை), மயக்கம் வருவது போன்றவை. மூளைக்கு ரத்தம், ஆக்ஸிஜன் ஆகியவை போதுமான அளவு கிடைக்காமல் இருந்தால் இந்த பாதிப்புகள் வரும். இதனால் நரம்பு மண்டலம் பாதிக்கபடலாம். இதய துடிப்பு குறையலாம். பக்கவாதம், மாரடைப்பு போன்றவை வர வாய்ப்பு அதிகம்.

இந்த கண்ணைகட்டும் மேட்டர் எதோ " சைக்கோசொமாட்டிக்" பிரச்சனையாம்ல. சோர்வு , டென்ஷன் இருக்கிறவங்களுக்கு இந்த பாதிப்பு வருமாம். யோகா, உடற்பயிற்சி போன்றவை செய்தால் இந்த பாதிப்புல இருந்து மீண்டுடலாமாம். அதனால இனிமே கண்ணை கட்டுச்சுனா அத யார் பதிவுலனா வந்து பின்னூட்டம் போடறத விட்டுட்டு நல்ல டாக்டரை பாருங்க. அல்லது யோகா, எச்சைசு மாதிரி எதுனா பண்ணுங்கோ. வர்ட்டா...

( ...இது சூடான இடுகைகள்ல வரும்ல:P...)

Saturday 23 February, 2008

IPL தேவையா? திருந்துமா BCCI எனும் லூசு கும்பல்..?

BCCI இப்போது செமத்தியான பணவெறி பிடித்து ஆடுகிறது. ஆஸியில் நடபெற்ற டெஸ்ட் போட்டியில் நடுவர்களின் திருவிளையாடல் எவ்வளவு மோசமானதோ அதில் கொஞ்சமும் குறைச்சலில்லாதது ஹர்பஜனின் தரம் கெட்ட வார்த்தைகள். சைமண்ட்ஸை மங்கி என்று சொல்லி இருந்தாலும் குற்றம் தான். ஆனால் ஹர்பஜன் மா..கி.. என்று தாயை பழிக்கும் ஒரு மோசமான வார்த்தையை உபயோகப் படுத்தி இருக்கிறார். அந்த டெஸ்ட் தொடரின் நடுவர் பதவியில் இருந்து பக்னரை நீக்கியது போல் ஹர்பஜனையும் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் BCCI தனது பணபலத்தால் ஹர்பஜனை காப்பாற்றிவிட்டது. இது தவறான முன் உதாரணம். இனி வரும் காலங்களில் மற்ற வீரர்களும் BCCI காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் இப்படி தரம் தாழ்ந்து நடக்கலாம். இது ஆரோக்கியமான செயல் அல்ல.

அது மட்டுமில்லாமல் கடைசி டெஸ்டிற்கு முன்பே அதில் இடம் பெற்றிருந்த சில வீரர்களை நீக்கிவிட்டு புதிய ஒரு நாள் தொடர் அணியை அறிவித்தார்கள். இது ஒரு நாள் போட்டியில் இட்ம் கிடைக்காத வீரர்களின் மன நிலையை பாதிக்க செய்து கடைசி டெஸ்ட் போட்டியையும் பாதிக்கும் என்பதை அறிந்தும் இந்த முட்டாள் தனத்தை செய்தது. கேட்டால் புதிதாக இடம் பிடித்திருக்கும் வீரர்களுக்கு உடை தயார் செய்ய வேண்டும்.. விமான டிக்கெட் முன் பதிவு செய்ய வேண்டும் .. ஆதற்கு கால அவகாசம் இல்லை என்று சப்பை கட்டு கட்டினார்கள். எதோ BCCI பிச்சைக் கார நிலையில் இருப்பது போல். உத்தேச அணியை அறிவித்து அனைவருக்கும் ஆடைகள் மற்றும் விமாட சீட்டு எடுக்க வேண்டியது தானே. என்ன கொறஞ்சி போயிருக்கும். லூசு பயலுக.

இது கொஞ்சம் பழய செய்தி.. புதிய செய்திக்கு வ்வருவோம்....

இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை பாழாக்கும் வேலைகளில் BCCI ஈடுபட்டிருக்கிறது. முக்கிய ந்கரங்களில் க்ளப்களை உறுவாக்கி மாட்டு சந்தையில் ஏலம் விடுவது போல் கிரிக்கெட் வீரர்களை ஏலம் விட்டிருக்கிறது. இதனால் என்ன பயன் இருக்க முடியும்? க்ளப்களை உறுவாக்கி அந்தந்த மாநிலத்தை சார்ந்த திறமையுள்ள புதிய வீரர்களுக்கு வாய்பளித்து தேசிய அணிக்கு திறமை வாய்ந்த வீரர்களை உருவாக்கினால் நல்லது தான். ஆனால் இங்கு நடப்பது என்ன? ஏற்கனவே பல நாட்டு தேசிய அணிகளில் விளையாடும் வீரர்களை குத்தகைக்கு அமர்த்தி விளையாட செய்யப் போகிறார்கள். இதில் பணத்தை குவிப்பதை தவிர வேறென்ன நோக்கம் இருக்க முடியும்?..

மேலும் இதனால் இந்திய அணிக்கு பாதகமான அம்சங்கள்.

1. எல்லா வீரர்களுக்கும் ஒரே விலை இல்லை. ஆகவே ஏலத்தில் குறைவான விலை போன வீரர்கள் மனதில் தாழ்வு மனபான்மை உருவாகும். இது அதிக விலை போன வீரர்கள் மீது குறந்த விலை போன வீரர்களுக்கு பொறாமையும் வெருப்பும் வர வாய்ப்புண்டு. அதே போல் அதிக விலை போன வீரர்கள் குறைந்த விலை போன வீரர்களை ஏளனமாக பார்க்கும் அல்லது மரியாதை குறைவாக நடத்தும் வாய்ப்புண்டு. சாதாரனமாகவே கோஷ்டி பூசல் மலிந்துள்ள அணி இந்திய கிரிக்கெட் அணி. குறிப்பாக தோனிக்கு அதிக பணம் கிடைத்தது மோசமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். நாம் சரியாக விளையாடவில்லை எனில் தோனி தனி மனிதனாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுவிடுவாரா.. என்று மற்ற வீரர்கள் நினைக்க கூடும்.

2.இந்த க்ளப்கள் 20-20 ஆட்டங்களுக்கே முக்கியத்துவம் தரப் போவதால் , அடுத்த முறை நாம் அதிக விலை போக வேண்டும் நம் தாழ்வு மனப்பான்மையை போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் 20-20 ஆட்டங்களில் அதிக கவனம் செலுத்தி அதற்கேற்றவாறே பயிற்சியில் ஈடுபடுவார்கள். இதனால் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் கோட்டை விடுவார்கள்.

3. எளிதில் உணர்ச்சிவசப் படும் நம் அணி வீரர்களிடம் இந்த தாழ்வு மனப்பான்மை மற்றும் மரியாதை குறைவான விஷயங்கள் சேர்ந்து எதிர் அணியில் விளையாடும் நம் நாட்டு வீரர்களிடம் மோசமான வார்த்தை பிரயோகம் அல்லது மோசமான நடத்தைகளை அதிகரிக்கும். இதனால் தேசிய அணிக்காக விளையாடும் போது ஒருவரை ஒருவர் எதிரிகளாக பாவித்துக் கொள்வார்கள். அணியின் ஒற்றுமை முழுமையாக சீரழியும். இதனால் தோல்விகளை மட்டுமே சந்திக்க வேண்டி இருக்கும்.

4. இந்த க்ளப்கள் நடத்தும் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் தான் நடக்கும். இது இந்திய வீரர்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டவே வழி வகுக்கும். ஆனால் இதில் இடம் பெற்றுள்ள வெளி நாட்டு வீரர்களுக்கு இந்திய மைதானங்கள் நன்கு பழகிவிடும். பின்னர் இந்திய மைதானங்களில் வைத்தே இந்திய அணிக்கு மந்திரிச்சி விடுவார்கள்.

5. இந்திய அணியினருடன் ஒன்றாக தங்கி பயிற்சி பெற்று விளையாடப் போகும் வெளிநாட்டு அணியினர் நம் வீரர்களின் அனைத்து பலவீனங்களையும் தெரிந்து கொள்வார்கள். இதை இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது பயன்படு்த்திக் கொள்வார்கள். அதிலும் குறிப்பாக ஆஸியினர் எதிர் அணியினரின் பந்து மற்றும் மட்டைகளுடன் மோதுவதை விட அவர்களின் மன ரீதியிலான பலவீனங்களுடன் தான் விளையாடி ஜெயிப்பார்கள். இது அவர்களுக்கு அருமையான சந்தர்ப்பம்.

IPL பிரபலமான வீரர்கள் மற்றும் BCCI யின் பணபலத்தை பெருக்க தான் உதவுமே தவிர கிரிக்கெட்டிற்கோ அல்லது வாய்ப்பு தேடும் புதிய வீரர்களுக்கோ துளியும் பயன்பட போவதில்லை. இதனால்.... BCCI பெரும் பணக்கார நிறுவனமாக இருக்கும். ஆனால் இந்திய அணியின் நிலை????????????

சுபாஷ் சந்திராவை ஒழுங்காக விட்டால் ICL மூலமாக பல புதிய திறமைசாலிகளை அறிமுகப் படுத்தி இருப்பார். ICL லிலும் பல நாட்டு வீரர்களும் இடம் பெற்றிருந்தாலும் உள்ளூர் வீரர்களுக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கிறார்கள்.

Friday 15 February, 2008

நானும் கச்சேரியில் - PIT போட்டிக்கு



இந்த மாத போட்டியில கலந்துக்க படம் புடிக்க நேரம் இல்லாம இருந்தது. அடுத்த மாதம் கலந்துக்கலாம்னு தான் இருந்தேன். ஆனா இந்த மாதம் வந்திருக்கிற எல்லா படங்களும் ரொம்ப அழகுனு ஒரு புகைப் பட நிபுனர் சொன்னார். அதனால போட்டிக்கு ஒரு திருஷ்டி படம் போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். :) .. கோவால எடுத்த படங்கள தேடினதுல இந்த மாத போட்டி தலைப்புக்கு பொருத்தமா கெடைச்ச படங்கள போட்டுட்டேன்.சூரிய அஸ்தமணம் படங்கள எந்த பிற் தயாரிப்பும் பண்ணல. க்ராப் மட்டும் தான் பண்ணேன். அநேகமா போட்டியில கலந்த்துக்கிற கடைசி ஆள் நான் தான்னு நெனைக்கிறேன். :)

Friday 8 February, 2008

வன விலங்குகளை வாழவிடுவோம்.

சமீபத்தில் கோவைக்கு அருகில் 3 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிர்விட்டன. அதில் ஒன்று தாயின் வயிற்றில் இருந்த குட்டி யானை. மிகக் கொடுமையான சம்பவம். இதற்கு காரணம் பேராசை பிடித்த பொதுமக்கள் தான்.சில ஆண்டுகளாகவே வனப் பகுதிகளை ஒட்டியுள்ள் பகுதிகளில் சிறுத்தை புலிகளால் மக்கள் உயிர் விடுவதும், யானைகளால் வயல்வெளிகள் பாதிக்கப் படுவதுடன் அவைகளால் மனிதர்களின் உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டது. இதற்கு காரணம் வனப் பகுதிகளை ஒட்டி வாழும் மக்களின் பேராசை தான் காரணம்.

வனப்பகுதிகளை ஒட்டியுள்ள தங்களின் விவசாய நிலபரப்பை அதிகரி்த்துக் கொள்ள காட்டை அழிக்கின்றனர். காட்டை அழித்து விவசாய நிலங்களாக மாற்றி இவர்கள் வளமாக வாழ்கிறார்கள். ஆனால் காட்டை நம்பி வாழும் வன விலங்குகளை பற்றி இவர்கள் சுத்தமாக கவலைபடுவதே இல்லை. வன விலங்குகளின் இருப்பிடத்தை இவர்கள் அழித்துக் கொண்டே இருந்தால் அவைகள் எங்கே போகும்?ஊருக்குள் தான் வரும். விலங்குகளின் இருப்பிடத்தை இவர்கள் ஆக்கிரமித்துவிட்டு , அவைகள் ஊருக்கு வந்து இவர்களை துன்புறுத்துவதாக கதறுகிறார்கள்.

தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழிப்போம்னு தான பாரதி சொன்னார். தனியொரு மனிதனின் வளத்தை பெருக்க ஜகத்தினை அழிப்போம்னு சொல்லலையே. காட்டை அழித்து விளைநிலங்களாக மாற்றுவது மட்டுமில்லாமல் , விறகுக்காகவும் வேறு உபயோகங்களுக்காகவும் மரங்களை வெட்டி யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் வழித் தடங்களை அழிக்கிறார்கள். வனவிலங்குகள் வழி தவறி ஊருக்குள் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். மேலும் மரங்களை வெட்டுவதால் மழை அளவு குறைந்து வனப் பகுதிக்குள் இருக்கும் நீர் ஆதாரங்கள் வற்றிவிடுவதாலும் அவைகள் தண்ணீருக்காக ஊருக்குள் வந்துவிடுகின்றன. இதற்கெல்லாம் மனிதர்கள் தான் காரணம்.

வனவிலங்குகள் அழியாமல் பாதுகாக்க வேண்டுமானால் காடுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். ஏனெனில் காடுகளில் யானைகள் தான் வழித் தடங்களை உருவாக்குகிறது. இதனை பயன்படுத்தியே மற்ற விலங்குகள் வனத்தின் மற்ற பகுதிகளுக்கு எளிதில் சென்று தங்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறது. மேலும் இந்த வழித் தடங்களை பயன்படுத்தியே அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பான பகுதிகளுக்கு எல்லா வன வினவிலங்குகளும் இடம் பெயர்கின்றன.

மக்கள் மேய்ச்சலுக்காக தங்களின் வளைப்பு கால்நடைகளை காடுகளின் விடுவதால் புதிய மரங்கள் உருவாவது தடுக்கப் படுகிறது. இதனால் வன விலங்குகளுக்கு உணவுகிடைப்பது குறைவதுடன் மழை அளவு குறந்து நீரில்லாமல் மரங்கள் காய்ந்து போக நேரிடுகிறது. இதனால் காடுகளில் தீப்பிடித்து வனமும் அதில் வாழும் உயிரினங்களும் அழிந்து விடுகின்றன. யானைகள் உருவாக்கும் பெரும் வழித் தடங்கள் காட்டுத் தீ பரவாமல் தடுக்க உதவுகிறது.

இப்படி பல வகைகளில் வன விலங்குகளுக்கு பயனுள்ள யானைகளை தந்தங்களுக்காக கொல்வது மட்டுமின்றி காட்டை அழித்து அவற்றை ஊருக்குள் வரவைத்து ரயிலிலும் பேருந்துகளிலும் மோதி ( பேருந்தில் அடிபட்டும் யானைகள் இறந்திருக்கின்றன) கொன்றால் அது யானைகளின் எண்ணிக்கையை மட்டுமின்றி பிற வன விலங்குகளின் எண்ணிக்கையும் குறைய செய்யும். ஆகவே யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை காப்போம். ஆக்கிரமிப்பு எண்ணத்தை கைவிடுவோம்.

கொசுறு : பாரதி ஜகம் என்று சொன்னது உலகத்தை அல்ல. வனத்தை தான். ஜகம் என்றால் வனம்(காடு) என்றும் பொருள் உண்டு. தனியொரு மனிதனின் பசிக்காக உலகத்தையே அழிக்கச் சொல்லும் அளவுக்கு பாரதி என்ன கொடூர உள்ளம் படைத்தவரா?.. அவர் காடு என்ற பொருள் பட சொன்னதை தான் நம்மாளுங்க உலகம்னு சொல்லி ஊரை ஏமாத்திட்டு இருக்காங்க. வனத்தில் இருப்பதாக நம்பப் படும் மோகிணிக்கு தான் ஜகன் மோகிணி என்று பெயர சொல்லுகிறார்கள்.

Sunday 3 February, 2008

இந்திரலோகத்தில் நா.அழகப்பன்

வடிவேலு ஒரு நாடக நடிகர். அவருக்கு கல்யாணத்துல எதோ தோஷம் இருக்காம். அவருக்கு 2 மனைவிகள் அமைவாங்களாம். அதுல முதல் மனைவி
இறந்துவிடுவாராம். அதனால ஊரில் புதிதாய் தோன்றி இருக்கும் ஒரு கற் (பெண்) சிலைக்கு வடிவேலுவை கல்யாணம் செய்து வைக்கிறார்கள். இந்த கல்யாணம் முடிந்து வடிவேலு அண்ட் கோ சென்றவுடன் அந்த கற்சிலைக்கு உயிர் வந்துவிடுகிறது. அவள் தான் இந்திரலோகத்து ரம்பையாம். பூமிக்கு சுற்றுலா வந்த ரம்பை, சூரிய அஸ்தமணத்திற்குள் தேவலோகம் செல்லாததால் "ஒரு பகல் ஒரு இரவு" கற்சிலையாக பூமியில் இருக்க வேண்டும் என இந்திரனால் சபிக்கப் பட்டு அந்த சாபத்தை ரம்பை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த சைக்கிள் கேப்பில் தான் வடிவேலு ரம்பையை கல்யாணம் செய்துக் கொள்கிறார்.
கல்லாக இருக்கும் போது கட்டினாலும் கண்வன் தானே என்று ரம்பை 2 பூதங்களை அனுப்பி வடிவேலுவை இந்திரலோகத்துக்கு தூக்கி வர செய்கிறாள். இரவு அவளுடனும் பகலில் பூமியிலும் இருப்பாராம். ஹூம்.. மச்சம்டா கருப்பா என்று நான் நினைத்திருப்பேன் என்று தவறாக நினைக்க வேண்டாம் . ப்ளீஸ் :P..
நாயகி நல்ல உயரமாக அழகாக இருக்கிறார். ரசிக்கலாம்.

இந்திரலோகத்தில் ரம்பை ஒரு படிகத்தை தருகிறாள். இதை வைத்திருந்தால் யார் கண்ணிற்க்கும் வடிவேலு தெரிய மாட்டாராம். அதை வைத்துக் கொண்டு வடிவேலு சொர்கம் நரகம் இரண்டையும் சுத்தி பார்க்கிறார். நா.அழகப்பன் மட்டுமல்ல.. இந்திரன், எமன் எல்லோரும் வடிவேலு தான். எமன் வடிவேலு 23ம் புலிகேசியை நினைவு படுத்துகிறார். ஆனால் புலிகேசி அளவுக்கு ரசிக்க முடியவில்லை.

[இடைவேளைக்கு பிறகு]

தன்னுடன் கொஞ்சி விளையாடும் ஒரு குட்டி பாப்பா இறந்ததும் பொங்கி எழுகிறார் வடிவேலு. குழந்தையின் உயிரை பறித்த எனம் உயிரை பறிக்க திட்டம் போட்டு அதற்காக பூமியில் இருந்து சாராயத்தை எமலோகத்துக்கு எடுத்து சென்று காமெடி பண்ணுகிறார். சகிக்கல.

இறந்த குழந்தைகள் சொர்கத்தில் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, இதை அவர்களின் பெற்றோர்கள் பார்த்தால் ஆனந்தப் படுவார்கள் என்று கூறி கண்ணீர் மலக வசனம் பேசுவது தான் படத்தின் மிகப் பெரிய காமெடி.:).. முடியலடா சாமி..

மனிதர்களை கொத்து கொத்தாக(இதென்ன வார்த்தை பிரயோகம்?) கொல்ல எதேதோ செய்தாலும் அதனை மனிதர்கள் முறியடித்துவிடுவதாக பொலம்பிவிட்டு க்ளைமாக்ஸில் மனிதர்கள் தாங்களே சாவை தேடிச் சென்றுவிட்டு அதற்கு தன் மீது பழி போடுவதாகவும் டகால்டி டையலாக் விடுகிறார். ஏண்டா... என்னதான் காமெடி படம்னாலும் ஒரு ஞாயம் வேணாமாடா? :(
வடிவேலு மேலோகத்தில் தான் பார்த்தவைகளை தன் அம்மாவிடமும் நண்பர்களிடமும் சொல்வதால், அவருக்கு பேய் பிடித்துவிட்டதாக கூறி பேயோட்ட வருகிறார் ஸ்ரேயா. வந்து வசனம் எதும் பேசி சிரமப் படாமல் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிவிட்டு போகிறார். அடப் பாவிகளா இதுக்காடா 30 லாவன்னா குடுத்திங்க? :( இதுல வடிவேலு 10 லாவன்னா குடுத்தாராமில்ல.. லேசா கட்டிபுடிக்க கூட இல்லையே.. அட ஸ்ரேயா பாதத்துல கூட முத்தம் தரலயே. இதுக்கு எதுக்குடா கருப்பா 10 லாவன்னாவ வீணடிச்ச? ஹ்ம்ம்ம்.... இதுக்கு தான் கஷ்டப் பட்டு சம்பாதிக்கனும்னு சொல்றது?அற்பனுக்கு வாழ்வு வந்தா....?

ஸ்ரேயாவ இப்படி வீணடிச்சிட்டாங்களே படுபாவி பயலுகன்னு நெனச்சி முடிக்கறதுக்குள்ள இந்திரலோகத்துல ரம்பை ஏடாகூடமா படுத்து நெளியறா.ஸ்ரேயா சம்பளத்துல பாதிய புடுங்கி இந்த பொண்ணுக்கு குடுங்கடானு மங்களூர் சிவா மாமா போராட்டம் நடத்துவதாக கூறியிருக்கிறாராம். :P
தன்னை பூமியில் வறுத்தெடுத்த காவலர் மேலோகம் வந்ததும் அங்கு தரும் தண்டணைகளை பார்த்து, பயந்து அழுது " இந்த தண்டணை எல்லாம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் நான் தப்ப்பெ செய்திருக்க மாட்டேனே" என்று பேசுவதை கேட்டதும் அழகப்பன் மனதில் பொரி பறக்கிறது.( பில்ட் அப் :P.. கண்டுக்காதிங்க..).. நரகத்தில் கிடைக்கும் தண்டனைகள் தெரியாம தான் மக்கள் பூமிய்ல் தப்பு பண்றாங்களாம்.உடனே இந்திரலோகத்தின் ரகசிய அறைக்கு சென்று மனிதர்களின் ரகசியங்கள் அனைத்தையும் தெரிந்துக் கொண்டு பூமிக்கு சென்று மக்களை திருத்துகிறார்... டேய்.. அடங்குங்கடா டேய்.. தாங்க முடியல..

பிறகு எமனை கொல்வதற்க்கு முயன்றது வடிவேலு தான் என்பது தெரிந்ததும் எனம் பொங்கி எழுந்து வடிவேலுவை துரத்திக் கொண்டு இந்திரலோகம் வருகிறார். அங்கு ரம்பை எமனுடன் வாக்குவாதம் செய்கிறார். இதில் இந்திரன் தலையிட்டு ரம்பைக்கும் வடிவேலுவுக்கும் சாபம் குடுக்கிறார். இதனால் வடிவேலு 90 வயது முதியவராகவும் ரம்பை ஆவியாகவும் உலா வருகிறார்கள்.வயோதிக வடிவேலு சாபம் பெற்றதிலிருந்து விமோசனம் பெரும் வரை காரணமே இல்லாமல் கூட அழுதுவடிகிறார்.

ரம்பை குடுக்கும் படிகத்தை வைத்துக் கொண்டிருந்ததால் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருக்கும் வடிவேலு நாரதர் நாசர் கண்ணுக்கு மட்டும் எப்படித் தான் தெரிந்தாரோ? புரியவில்லை.

நாரதர் கலகம் நன்மையில் முடியவேண்டுமல்லவா?(அப்டியா?!).. அதனால் பிரகஸ்பதி இந்த சாபத்திற்கு சாபவிமோசனம் சொல்கிறார். அதாவது ஆவியாக் திரியும் ரம்பை வடிவேலுவின் கலுத்தில் மாலை அணிவித்தால் இருவருக்கும் சாப விமோசனம் கிடைத்து பழய நிலையை அடந்துவிடுவார்களாம். இது தான் க்ளைமாக்ஸ். இதற்காக இவர்கள் செய்யும் கோமாளித் தனங்கள் சீரியல் பார்க்கும் உணர்வைத் தருகிறது. இழு இழுனு இழுக்கறாய்ங்கப்பு. :(

பிறகு ஒருவழியாக ரம்பை உருவத்தில் இருக்கும் ஒரு வட இந்தியப் பெண்ணின் உடலில் புகுந்துக் கொள்ளும் ரம்பையின் ஆவி தமிழில் பேசுவதைக் கண்ட அவர்கள் பெற்றோர்கள் தீவிர ஆராய்ச்சி செய்து அதன் விளைவாக மதுரை அழகர் கோவிலுக்கு அந்த பெண்ணை அழைத்துவந்து வடிவேலு கழுத்தில் மாலையிட செய்து ரம்பைக்கும் வடிவேலுவுக்கும் சாபவிமோசனம் கிடைத்து நாரதர் ரம்பைக்கு எதார்த்தத்தை புரிய வைத்து அந்த வட இந்திய பெண்ணையே வடிவேலுக்கு திருமணம் செய்து வைத்து..... ஸ்ஸ்ஸ்..அப்பாடா.. தாறுமாறா நம்ம கண்ண கட்டி படத்த முடிக்கிறாங்க.

தயவு செய்து யாரும் புலிகேசி போல் இருக்கும் என்று நினைத்து இந்த படத்தை பார்க்க செல்ல வேண்டாம். மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது.
எமன் வேஷத்துக்கு வினுசக்கரவர்த்தியை பயன் படுத்தி இருக்கலாம்.

இடைவேளைக்கு முன் : பார்க்க சென்ற பாவத்திற்காக பார்க்கலாம்.
இடைவேளைக்கு பின் : முதல் பாதியை பார்த்த பாவத்திற்கு தண்டணை.

ஷொட்டு

  • நாயகியின் நாட்டிய நடனங்கள். அற்புதமாக ஆடுகிறார். அழகாகவும் இருக்கிறார்.
  • நாரதராக வரும் நாசரின் நடிப்பும் ஒப்பனையும். மிகையாகவுமில்லாமல் குறையாகவும் இல்லாமல் சரியாக செய்திருக்கிறார்.
  • தோட்டா தரணியின் கலை. அழகான செட்கள்.
  • இந்திரனாக வரும் வடிவேலு கொஞ்சம் ரசிக்க வைக்கிறார்.

குட்டு
  • அழகப்பன் வடிவேலு லிப்ஸ்டிக்கை குறைத்திருக்கலாம். ராமராஜன் தேவலை.
  • புலிகேசியின் சுவடுகள் மறையும் முன் அதே போல் எடுக்க முயற்சித்தது.
  • இடைவேளைக்கு பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இயக்குனர் பேய் முழி முழித்திருக்கிறார்ர்.
  • க்ளைமாக்ஸ் இழுவை.
இதை இந்தியில் மொழிபெயர்த்தால் புதியதாக ஆரம்பித்திருக்கும் NDTV Imagineல் இந்திய தொலைகாட்சிகளில் முதன் முறையாக என்று ஒரு ரவுண்டு வரலாம்.

சந்தேகம் சஞ்சய்காந்தி asks...
  • இது காமெடிப் படமா இல்ல அழுகாச்சி படமா?
மதிப்பெண் : 80 க்கு 35. (80 = ப்ளாக்கில் வாங்கிய டிக்கெட் விலை)

ப்ளாக் டிக்கெட்கள் டிக்கெட் கவுண்டர் அருகில் தான் விற்க்கப் பட்டது.அந்த இடத்தில் விற்க தியேட்டர் ஊழியர்களால் தான் முடியும். நான் வாங்கும் போது ஏராளமானோர் வாங்கினார்கள். எல்லாரும் அப்போதைய காட்சிக்காகத் தான் வாங்கினார்கள். அப்படினா என்ன வெங்காயத்துக்கு ஹவுஸ்ஃபுல் போர்ட். அரசாங்கம் நிர்ணயித்த விலையைவிட அதிக விலையில் விற்க இந்த அய்யயோக்கியத் தனம்.

Friday 1 February, 2008

Say NO to Dirty Gold!


எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே தங்கத்தின் மீது அப்படி ஒரு வெருப்பு. அதற்கு காரணம் ரொம்ப பாமரத் தனமானது தான். பல ஏழைகளின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் பெருமை இந்த தங்கத்தையே சாரும். வரதட்சனை என்ற பெயரில் தங்கத்தை பெண் வீட்டில் வாங்கி அதை அடகு வைத்தோ அல்லது விலைக்கு விற்றோ பிழைப்பு நடத்த விரும்பும் நாகரிக பிச்சைக்காரர்களால் பல ஏழைப் பெண்களும் அவர்கள் பெற்றோர்களும் படும் அவஸ்தையை கண்டு வந்த வெருப்பு தான் இது. பல சமயங்களில் பேராசை பிச்சைக்காரர்களால் பணக்காரக் குடும்பங்கள் கூட நிம்மதியை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது சேலத்து மந்திரி வீட்டிலோ , நகைச்சுவை எம்.பி வீட்டிலோ அல்லது பல்கலை துணைவேந்தர் வீட்டிலோ சம்பந்தம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு பெரிய பணக்கார குடும்பமாக இருந்தாலும் இதே நிலை தான்.

நாகரிக பிச்சைககாரர்களை மட்டும் இல்லை. வழிப்பறி கொள்ளையர்களையும் நகைக்கடை கொள்ளையர்களையும் உருவாக்கிய பெருமையும் இந்த தங்கத்தையே சாரும்.அதே போல் கோவில்களில் கடவுள்களின் கழுத்திலும் உடல் முழுவதிலும் அலங்கரித்துவிட்டு அதை பாதுகாக்கவும், சில இடங்களில் கோவிலையே தங்கத்தில் கட்டிவிட்டு அதை பாதுகாக்கவும் மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களை நூற்றுக் கணக்கில் அங்கு பாதுகாப்பிற்கு வைத்து மக்களின் வரி பணத்தை வீணடிக்கும் பெருமையும் இந்த தங்கத்தையே சாரும். இது போன்ற எல்லாருக்கும் தெரிந்த காரணங்களினால் தான் எனக்கு தங்கத்தின் மீது வெருப்பு வந்தது.

ஆனால் இந்த அசிங்கம் பிடித்த தங்கம் வேறு என்ன மொள்ளமாறித் தனங்கள் எல்லாம் செய்யுது பாருங்க.

ஒரு தங்க மோதிரம் 20 டன் சுரங்க கழிவை உருவாக்குகிறது.

நீர் மாசுபடுதல்:-

  • தங்க சுரங்கங்களால் அதன் அருகில் உள்ள நீர் நிலைகள் பெரிதும் பாதிக்கப் படுகிறது. அருகில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் அமிலத்தின் அளவை அதிகரித்து நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில தங்க சுரங்கங்கள் தொடர்ந்து நச்சுக் கழிவுகளை ஆறுகள், ஏரிகள் மற்றும் கடலில் கலக்கவிடுகின்றன.ஆறுகளில் கலக்கும் நச்சுக்கழிவுகளால் கழிவு நுரைகள் மற்றும் சில பாதி திரவ நிலையில் உள்ள நச்சுக் கழிவுகள் ஆறுகளில் படிந்து அணைக்கட்டுகளில் விரிசல் ஏற்படவும் அணைகள் உடையவும் காரணமாக இருகிறது. தங்கத்தை அதன் தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் சயனைடு பிறகு நீர் நிலைகளில் கலக்கும் போது மீன்கள் போன்ற உயிரினங்கள் அழிகின்றன.
  • சுரங்க கழிவில் வெளியேறும் வேறு சிலரசாயினங்களான பாதரசம் மற்றும் சில கடினமான உலோகங்கள் அருகில் வசிக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு தலைமுறை தாண்டிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
காற்று மாசுபடுதல் :-
  • ஆழமான திறந்தவெளி சுரங்கங்கள் ஏராளமான தூசுக்களை உருவாக்குவதோடு திரவக் கழிவுகளையும் நீரில் சேர்க்கிறது. பிறகு இவை உலர்ந்து வலிமண்டலத்தில் கலந்து மாசு உண்டாக்கி அருகில் வாழும் மனிதர்களுக்கும் பாதிப்பை தருகிறது. சுரங்கங்களுக்கு அருகில் பெருகும் போக்குவரத்தால் தூசுகள் மேலெழும்பி காற்றை மாசுபடுத்துகிறது.
  • தங்கத்தாதுப் பொருட்களை உருக்கும்போது ஆண்டுக்கு 142 டன் சல்ஃபர் டையாக்ஸைடை வளிமண்டலத்தில் சேர்க்கிறது. வளிமண்டலத்தில் மாசு ஏற்படுத்துவதில் இதன் ( SO2) பங்கு மிக அதிகம்.

சமூக பாதிப்புகள்:-

  • தங்க சுரங்கங்களால் நச்சு கலந்த காற்றையும் நீரையும் உபயோகிக்கும் அப்பகுதி மக்களுக்கு நீண்டகால உடல் கோளாறுகள் உறுவாகிறது. அவர்களின் வருமானம் பெரும்பாலும் ஆஸ்துமா, தோல் நோய்களுக்கு எதிராகப் போராடவே செலவழிக்கப் படுகிறது.
  • சுரங்கங்கள் அமைந்துள்ள நகரங்கள் அங்கு வேலை தேடி வருபவர்களாலும் அவர்கள் குடும்பங்களாலும் அந்த நகரங்களில் எல்லை பெரிதாகிறது. எனவே அந்த பகுதியில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்கள் சுரங்க நிறுவனங்களால் வெளியேற்றப் படுகிறார்கள்.வேலை தேடி வருபவர்களால் மது உபயோகித்தல், பாலியல் தொழில், போதை பொருள் விற்பனை போன்ற குற்றச் செயல்கள் அதிகரிக்கிறது.
  • ஆழமான திறந்தவெளி சுரங்கங்கள் பூமிக்கு அடியில் தோண்டப்படும் சுரங்கங்களை விட 8 முதல் 10 சத்வீதம் அதிகக் கழிவை உறுவாக்குகிறது.
பொருளாதார விளைவுகள்:-
  • பொதுவாக சுரங்கத் தொழிலை நம்பியுள்ள நாடுகளில் நீண்டகால பொருளாதார வளர்ச்சி இருக்காது. அந்த நாடுகளில் குறைந்த பொருளாதார வளர்ச்சியும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும். இந்த நாடுகள் சுரங்கங்களில் கிடைக்கும் பொருளை மூலப் பொருட்களாகவே மற்ற நாடுகளுக்க்கு அனுப்பிவிடுவதால் அவற்றைக் கொண்டு முழுமையான பொறுளை உறுவாக்குவதில்லை. எனவே வேலை வாய்ப்பு பெருகுவதில்லை. இதனால் இந்த நாடுகளில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கையும் குற்றச் செயல்களின் அளவும் அதிகமாகவே இருக்கிறது. இதனால் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப் படுகிறது.
  • சுரங்கங்கள் மீண்டும் புதுபிக்க இயலாத தொழிலாகவே இருக்கிறது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப் படும் இந்த சுரங்கங்கள் மண்ணில் நச்சு தன்மையை உண்டாக்குவதால் அந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு விவசாயமோ அல்லது வேறு தொழிலோ செய்ய முடியாமல் போய்விடுகிறது. இது உணவு உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது.
  • உலகில் ஏழ்மையான நாடுகளில் பாதி நாடுகளில் தாதுப் பொருட்கள் ஏற்றுமதி தான் மிகப் பெரிய தொழில்.
மனித உரிமை மீரல்:-

  • சுரங்க தொழிலில் உள்ள நிறுவனங்கள் அப்பகுதி மக்களை மிகக் கேவலமாக நடத்துகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படுகிறது.
  • 1990 மற்றும் 1998 ஆண்டுகளுக்கிடையில் கயானாவின் டர்க்வா மாவட்டத்தில் மட்டும் 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் சுரங்க தொழில் காரணமாக வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள்.
  • உலகின் மிக அபாயகரமான தொழில்களில் சுரங்கத் தொழிலும் ஒன்று.
மேலும் அறிய : http://www.nodirtygold.org/


ஆகவே தங்கம் உபயோகிப்பதை தவிற்போம்!. சுற்றுச் சூழலையும் மனித உரிமைகளையும் காப்போம்.!

Tamiler This Week